
ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் அதிகமாக அணிகள் ரன்கள் குவிப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் மிகவும் எளிதாக 250 ரன்களுக்கும் அதிகமாக அதிக முறை ரன்கள் குவித்தனர். ஐபிஎல் தொடரில் எந்த அணி 300 ரன்களை முதலில் குவிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
300 ரன்கள் சாத்தியம்
ஒரு இன்னிங்ஸில் அணிகள் 300 ரன்கள் குவிக்கும் நிலையை ஐபிஎல் தொடர் எட்டிவிட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: எங்களால் 300 ரன்கள் குவிக்க முடியும். 300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என்றார்.
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 250 ரன்களுக்கும் அதிகமாக மூன்று முறை ரன்கள் குவித்தது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அதன் முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்தது.
அணிகள் அதிக ரன்கள் குவிப்பதற்கு இம்பாக்ட் பிளேயர் விதியும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.