
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஆண்ட்ரே ரஸல் அரைசதம் விளாசல்
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரைன் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து, ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், குர்பாஸ் 35 ரன்களிலும், ரஹானே 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின், அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஜோடி சேர்ந்தனர். ரகுவன்ஷி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரஸல் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். ரகுவன்ஷி 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.
அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ரிங்கு சிங் 6 பந்துகளில் அதிரடியாக 19 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், யுத்விர் சிங், மஹீஷ் தீக்ஷனா மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.