டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 4-3 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. நேற்று, அயர்லாந்தை 1-0 என வென்றது. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே மீதமிருந்த நிலையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கக் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமை உருவானது.
தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என வென்றது. வந்தனா ஹாட்ரிக் கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
குரூப் ஏ பிரிவில் 4-ம் இடத்தைப் பிடிக்க இந்தியாவும் அயர்லாந்தும் போட்டியிடுகின்றன. கடைசி ஆட்டத்தில் அயர்லாந்து அணி இங்கிலாந்துடன் மோதுகிறது. அந்த ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றுவிட்டால் இந்திய மகளிர் அணியால் காலிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் போய்விடும். அயர்லாந்து தோற்றுவிட்டால் இந்திய மகளிர் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் அயர்லாந்து - இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.