
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள மானு பாக்கர் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மானு பாக்கர் பெருமை சேர்த்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் பிரிவில் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார் மானு பாக்கர். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வெல்லும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதேபோல, ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள மானு பாக்கர் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார் என விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் மன்சுக் மாண்டவியா பதிவிட்டிருப்பதாவது: பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ள மானு பாக்கரை இன்று சந்திதேன். அவரது இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். மானு பாக்கரின் இந்த சாதனை லட்சக்கணக்கானோர் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும். ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நினைத்து பெருமை கொள்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று நேற்று (ஆகஸ்ட் 7) தில்லி வந்தடைந்த மானு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் கொடியேந்தி அணி வகுப்பில் கலந்து கொள்பவர்களில் ஒருவராக உள்ள மானு பாக்கர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) மீண்டும் பாரீஸ் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.