
சாட்டியுருக்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் செவ்வாய்க்கிழமை 2}ஆவது வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை மானு பாக்கர் படைத்திருக்கிறார்.
போட்டியின் 5}ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றில் மானு பாக்கர்/சரப்ஜோத் சிங் இணை 16}10 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் லீ வோன்ஹோ/ஒஹ் யெ ஜின் இணையைச் சாய்த்து பதக்கத்தை வென்றது.
முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை வெண்கலம் வென்ற மானு பாக்கருக்கு இது 2}ஆவது பதக்கமாகும்.
அவருடன் களம் கண்ட சரப்ஜோத் சிங் தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். 3 நாள்களுக்கு முன்னர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் தகுதிச் சுற்றுடன் வெளியேறிய சரப்ஜோத் சிங், தற்போது கலப்பு அணிகள் பிரிவு மூலமாக கனவுப் பதக்கத்தை அடைந்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவுக்கு முன்: கடந்த 1900}ஆம் ஆண்டு இதே பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிலிருந்து, பிரிட்டீஷ் இந்தியரான நார்மன் பிரிட்சார்டு 200 மீட்டர் ஸ்பிரின்ட் மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றிருந்தார்.
அதன்பிறகு, சுதந்திர இந்தியாவில் அவ்வாறு ஒரே போட்டியில் இரு பதக்கங்கள் வென்றவராக மானு சாதனை படைத்திருக்கிறார். இத்துடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 2}ஆவது வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது.
வாழ்த்து: மானு பாக்கர், சரப்ஜோத் சிங் இணைக்கு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்துறை பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.