சட்டவிரோதமாக போதை மருந்து உட்கொண்டதாக ரஷ்ய இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலை ஸ்பெயினின் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் மறுத்துள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்தவர் ரஃபேல் நடால்.பிரபல டென்னிஸ் வீரரான இவர் களிமண் தரை டென்னிஸ் ஆட்டங்களில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரராக விளங்கியவர். சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த இணைய தள தகவல் திருட்டுக் கும்பல் ஒன்று, 'வடா' என்று அழைக்கப்படும் 'உலக போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்தின்' தகவல்களை திருடி இணையத்தில் வெளியிட்டது.இதில் தடை செய்யப்பட்ட போதைமருந்துகளை, வடாவின் அனுமதியோடு எடுத்துக் கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியல் இடம் பெற்றிருந்தது. அதில் நடாலின் பெயரும் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்த நிலையில் இன்று சரகோஷா நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் நடால் தெரிவித்ததாவது:
அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு முறையும் என்னுடைய முட்டி வலி சிகிச்சைக்காக வடாவின் அனுமதியுடன் அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டேன். எனவே இது கண்டிப்பாக சட்ட விரோதம் கிடையாது. இதை தேவை இல்லாமல் பெரிதாக்க வேண்டாம்.
இவ்வாறு நடால் தெரிவித்தார்.