

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது.
மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளுமே 1-1 என சம நிலையில் உள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. எனவே, இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்கும் நிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரை கைப்பற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் இரு மாற்றங்கள். காயம் காரணமாக கோலி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டிக்கு ரஹானே இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மசாலாவின் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. முதல் பந்திலேயே விக்கெட் விழுந்திருக்கவேண்டியது. ஆனால் புவனேஸ்வர் பந்துவீச்சில் வார்னர் கொடுத்த கேட்ச்சைத் தவறவிட்டார் கருண் நாயர். இதனால் தப்பிப் பிழைத்தார் வார்னர். இந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ரென்ஷா 1 ரன்னில் உமேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த வார்னரும் ஸ்மித்தும் இந்திய அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார்கள். ஷாட் அடிக்க சாதகமான பிட்ச் என்பதால் கடகடவென ரன்கள் எடுத்து தகுந்த இடைவெளியில் பவுண்டரிகள் அடித்தார்கள். ஸ்மித் 67 பந்துகளிலும் வார்னர் 72 பந்துகளிலும் அரை சதம் எடுத்தார்கள்.
முதல் நாளின் முதல் பகுதியில் 31 ஓவர்களில் 18 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார்கள் இருவரும். உணவு இடைவேளையின்போது 31 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 101 பந்துகளில் 72 ரன்களும் வார்னர் 79 பந்துகளில் 54 ரன்களும் எடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.