

ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் மும்பை சிட்டி அணிக்கு எதிரான ஆட்டம், வழக்கமானதாகவே இருக்கும் என்று பெங்களூரு எஃப்சி அணி வீரர் சுனில் சேத்ரி கூறினார்.
ஐஎஸ்எல் போட்டியில் இதுவரை மும்பை சிட்டி எஃப்சி அணிக்காக விளையாடி வந்த சுனில், இந்த சீசனில் புதிதாக களம் காணும் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடுகிறார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐஎஸ்எல் போட்டியில் இதுவரை மும்பை அணிக்காக மட்டுமே விளையாடி வந்தேன். எனவே, அந்த அணி உரிமையாளர், ரசிகர்கள் என எல்லோருமே எனக்கு பிடித்தமானவர்கள். அந்த அணிக்கென என் மனதில் தனி இடம் உண்டு. இந்த சீசனில் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடுகிறேன்.
களத்தில் விளையாடும்போது, மும்பை அணி எனது எதிரணிதான். அந்த வகையில் எனது மனதில் எந்தச் சலனமும் இருக்காது. இதர அணிகளுக்கு எதிரான ஆட்டத்தைப் போலவே அந்த அணிக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாடுவேன். ஆனால், இந்த சீசனில் புதிதாக பங்கேற்கும் பெங்களூரு அணி, தனது முதல் போட்டியிலேயே மும்பையை எதிர்கொள்வது எதிர்பாராத ஒன்று.
இந்த சீசனில் ஜாம்ஷெத்பூர், பெங்களூரு என புதிய இரு அணிகள் இணைந்துள்ளதால் கூடுதல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. என்னைப் பொருத்த வரையில் இது மகிழ்ச்சிக்குறியது. ஐ-லீக் உள்ளிட்ட போட்டிகளில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ள பெங்களூரு அணி, ஐஎஸ்எல் போட்டியிலும் முத்திரை பதிக்கும் என்று சுனில் சேத்ரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.