

உலக பாட்மிண்டன் போட்டிகளில் இரட்டையர்கள் பிரிவில் இந்தியர்கள் சாம்பியன்களாவதற்கு சில காலம் பிடிக்கும் என்று பாட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கூறினார்.
சமீபத்தில் நிறைவடைந்த சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வினி பொன்னப்பா மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டியுடனும், கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜுடனும் இணைந்து பட்டம் வென்றார்.
இந்நிலையில், அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வீரர், வீராங்கனைகள் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், உலக அளவிலான போட்டிகளில் அவர்கள் சாம்பியன்களாவதற்கு சில காலம் ஆகும்.
ஏனெனில், இரட்டையர் பிரிவில் இருவர் இணைந்து பயிற்சி பெற வேண்டியுள்ளது. அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. ஒற்றையர் பிரிவில் அந்த சவால் இருப்பதில்லை. அந்த வகையில் இரட்டையர் பிரிவில் சிரக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தேசிய சாம்பியன்ஷிப்பில் இரு பட்டங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் கலப்பு இரட்டையரில் முதல் முறையாக பட்டம் வென்றது கூடுதல் மகிழ்ச்சி. இப்போட்டியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்நிலை போட்டியாளர்களும் விளையாடியதால், சிறப்பான போட்டியாக இருந்தது.
சிக்கி ரெட்டி, பிரணவ் ஜெர்ரி ஆகியோர் மிகுந்த அனுபவசாலிகள் ஆகியுள்ளனர். கடந்த ஓராண்டாக சிறப்பாக விளையாடி வருகின்றனர். அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு. அதுவே அனைவரது இலக்காகவும் இருப்பதால், சற்று சவால் அளிப்பதாகவே இருக்கும் என்று அஸ்வினி பொன்னப்பா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.