பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளிலும் வென்று 4-0 என பாகிஸ்தான் அணி தொடரை வென்றது.
இத்தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையில் தன்னை சூதாட்டத் தரகர் ஒருவர் அணுகியதாக பாகிஸ்தான் அணியில் விளையாடி வரும் பிரபல கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த வீரர் கூறியதாவது:
இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியின் போது சூதாட்டத் தரகர் ஒருவர் என்னிடம் தொடர்பு கொண்டார். இவர் வீரர்களாகிய எங்களுக்கும், அரபு நாட்டில் உள்ள சில முக்கியஸ்தர்களுக்கு நன்கு தெரிந்தவர்.
இருப்பினும் நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சூதாட்டத் தடுப்புக்குழுவிடம் இவ்விகாரம் தொடர்பாக உடனடியாகத் தெரிவித்துவிட்டேன் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டும் சூதாட்ட சர்ச்சைகளும் என்றும் பிரியாதவைதான். சமீபத்தில் கூட இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போதும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 6 வீரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டது.
இதில் இருவருக்கு 5 ஆண்டுகள் தடை, ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரின் தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை.