/

தேசிய கூடைப்பந்து: தமிழக ஆடவர் சாம்பியன்

68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி 94-86 என்ற புள்ளிகள் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

News image
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் முதலிடத்தை வென்ற ரயில்வே அணிக்கு கோப்பையை வழங்குகிறார் முதல்வர் 
Updated On :24 ஜனவரி 2018, 7:19 pm

க.தி.மணிகண்டன்

68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி 94-86 என்ற புள்ளிகள் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த இப்போட்டியில், தமிழகம்-சர்வீசஸ் இடையேயான ஆடவர் பிரிவு இறுதிப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் திறமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். முதல் பாதியில் தமிழக அணி 41-40 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, இரண்டாவது பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இரு அணிகளும் திறமையாக விளையாடி 'யார் வெற்றி பெறுவார்கள்?' என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினர். ஒரு கட்டத்தில் தமிழகம் பல புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தது. இறுதியில் உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் 94-86 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
லீக் ஆட்டங்களில் ஒரு போட்டியில்கூட தமிழக அணி தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வே சாம்பியன்: இதனிடையே, மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய ரயில்வே அணி 100-71 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற இந்திய ரயில்வே அணிக்கு தங்கக் கோப்பையும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சத்தீஸ்கர் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக, மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கேரள அணி 74-31 என்ற கணக்கில் கர்நாடகத்தை வீழ்த்தியது. கேரள அணிக்கு ரூ.50ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தமிழக மகளிர் அணி 5–ஆவது இடம்: இந்தப் போட்டியில் 5-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி 84-67 என்ற புள்ளிக் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது.
இப்போட்டியின் நிறைவுநாளான புதன்கிழமை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.