இந்தியாவில் பாதுகாப்பில்லை என்பது சுத்தப் பொய்: ஸ்குவாஷ் வீராங்கனை பெற்றோர் விளக்கம்

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பரவிய தகவல் சுத்தப் பொய் என்று ஸ்விட்சர்லாந்து ஸ்குவாஷ் வீராங்கனையின் பெற்றோர் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் பாதுகாப்பில்லை என்பது சுத்தப் பொய்: ஸ்குவாஷ் வீராங்கனை பெற்றோர் விளக்கம்
Updated on
1 min read

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பரவிய தகவல் சுத்தப் பொய் என்று ஸ்விட்சர்லாந்து ஸ்குவாஷ் வீராங்கனையின் பெற்றோர் விளக்கமளித்துள்ளனர்.

சென்னையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர் மற்றும் வீராங்கனைகள் சென்னைக்கு வருகை தந்தனர். இதனிடையே அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை செய்தி வெளியானது. அதே நேரத்தில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத காரணத்தால் இந்த ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்கவில்லை என்று அவரது பயிற்சியாளர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தகவலை மறுத்து ஸ்குவாஷ் வீராங்கனை ஆம்ப்ரே அல்லிங்ஸ் பெற்றோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

ஆம்ப்ரே அல்லிங்ஸ் பெற்றோர் என்ற முறையில், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில்லை என்பதை மறுக்கிறோம். ஆனால் எங்கள் மகள் தொடர்பான விவகாரம் ஊடகங்களின் செய்திகளால் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நாங்கள் குடும்பத்துடன் விடுமுறையை செலவிட விரும்பினோம். எனவே தான் இந்த தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

ஆம்ப்ரே இதற்கு முன்னர் எகிப்து, மொராக்கோ, துனீஷியா, போலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, மெக்ஸிகோ உள்ளிட்ட எத்தனையோ நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவற்றையெல்லாம் விட பாதுகாப்பில் இந்தியா ஒன்றும் குறைந்துவிடவில்லை. இந்தியாவில் பாதுகாப்பில்லை என்பது சுத்தப் பொய். எங்கள் மகள் விவகாரத்தில் ஊடகங்களின் தவறான புரிதல் தான் காரணம் . 

இம்முறை நடைபெறும் ஜூனியர் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ஆம்ப்ரே-வை அனுப்பக்கூடாது என்று நாங்கள் முன்பே முடிவு செய்துவிட்டோம். அவர் தொடர்ந்து விளையாடி வருவதால் மிகவும் சோர்வாகக் காணப்படுகிறார். எனவே தான் எங்கள் அனைவருக்கும் புத்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக இம்முறை குடும்ப சுற்றுலா சென்று விடுமுறையை ஒன்றாக கழிக்க விரும்பினோம்.

நாங்கள் அனைவரும் தவறாமல் மற்றொரு தருணத்தில் இந்தியா வர விரும்புகிறோம். ஆனால் தற்போது இந்த தவறான புரிதலால் தன்மீது இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு காரணமாக ஆம்ப்ரே மிகவும் வருத்தமடைந்துள்ளார். தயவு செய்து அவர் மீதான வெறுப்புணர்வை கைவிடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com