பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆசிய வளர்ந்துவரும் நாடுகள் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி பங்கேற்காது என்று பிசிசிஐ அறிவித்துவிட்டதால், அந்தப் போட்டி அங்கு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தியதாக மத்திய அரசு ஆதரப்பூர்வமாக குற்றம்சாட்டி வருகிறது.
அந்நாட்டுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவும், இருதரப்பு தொடரில் பங்கேற்கவும் பிசிசிஐ அமைப்பு அனுமதி மறுத்து வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் என்பதன் அடிப்படையில்தான் நாங்கள் இந்தத் தொடரை நடத்த திட்டமிட்டோம். இந்திய அணி இங்கு வராத பட்சத்தில், போட்டியை இலங்கை அல்லது வங்கதேசத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்' என்றார்.
அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி, துபையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆசியான் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி, இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும்.
செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில், பாகிஸ்தான் பங்கேற்குமா? என்பது குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். இந்தியா நுழைவு இசைவு (விசா) அளிக்கும்பட்சத்தில் ஏப்ரலில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கேற்பேன்' என்றார்.