சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சக வீரர்களின் குழந்தைகளுடன் சேப்பாக்கம் மைதானத்தில் ரேஸ் ஓடி விளையாடிய விடியோ வைரலாகப் பரவி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12-ஆவது சீசனில் சனிக்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை தோற்கடித்தது.
போட்டி முடிந்த பின்னர் சென்னை அணி வீரர்களான வாட்சன் மற்றும் இம்ரான் தாஹிரின் மகன்கள் மைதானத்தில் விளையாட்டாக ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகினர். இதனை பின்னால் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோனி, சிறுவர்களுக்கு முன்னதாக பந்தயத்தை தொடங்கி முதலில் ஓட ஆரம்பித்தார்.
குழந்தைகளுடன் சிறிது தூரம் ஓடிய தோனி, தாஹிரின் மகனை தூக்கிகொண்டு திரும்பி துவங்கிய இடத்திற்கு வந்து விட்டார். பின்னர் வாட்சனின் மகன் திரும்பி ஓடிவரும் வரை அங்கு நின்று கொண்டிருந்த தோனி, அவன் வந்ததுடன் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.
இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.