சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?: வெடித்துள்ள புதிய சர்ச்சை!
இந்திய முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் உடல்கள் அரசு மரியாதையுடன் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டன. எனில்...


கிரிக்கெட் உலகுக்கு சச்சின் டெண்டுல்கர் என்ற ஜாம்பவானை அறிமுகம் செய்த முன்னாள் பயிற்சியாளர் ரமாகந்த் அச்ரேகர் (87), மும்பையில் நேற்று காலமானார். வயது மூப்பு காரணமான நோய்களால் நீண்டநாள்களாக பாதிக்கப்பட்டிருந்த அவர், புதன்கிழமை மாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கிரிக்கெட் வீரராக அச்ரேகர் ஒரேயொரு முதல்தர கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருந்தாலும், சச்சின் டெண்டுல்கர் என்ற நட்சத்திர வீரரை இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கண்டறிந்து தந்து பெருமை பெற்றார். தாம் சிறுவனாக இருந்தபோது தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிக நேர்த்தியாக செதுக்கிய பெருமை அச்ரேகரையே சேரும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சின் தவிர்த்து, வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே, சமீர் திகே, பல்வீந்தர் சிங் சாந்து போன்ற வீரர்களையும் பயிற்றுவித்த அச்ரேகருக்கு, 2010-இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக 1990-இல் துரோணாச்சார்யா விருதும் அவர் வென்றுள்ளார்.
சிவாஜி பார்க் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அச்ரேகரின் உடல் இன்று காலை வைக்கப்பட்டது. பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அச்ரேகரின் உடலை சச்சின் தோளில் சுமந்து சென்றார். காம்ப்ளி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில் அச்ரேகரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன் என்கிற கேள்வியை எதிர்கொண்டுள்ளது மஹாராஷ்டிர அரசு. இந்திய முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் உடல்கள் அரசு மரியாதையுடன் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டன. எனில், பத்ம ஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளைப் பெற்றுள்ள அச்ரேகருக்கு அரசு மரியாதை அளிக்காதது ஏன் என்கிற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபற்றி மஹாராஷ்டிர அரசின் வீட்டு வாரியத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா கூறியதாவது: நடந்த சம்பவங்களுக்கு மஹாராஷ்டிர அரசின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன நடந்தது என்று விசாரிக்கிறேன். விளையாட்டுத்துறை அமைச்சர் வினோத் தாவ்தே மும்பையில் இல்லாததால் நெறிமுறைகளைச் சரியாக கவனிக்கமுடியவில்லை. இதுகுறித்து முதல்வரிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் விளையாட்டுத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அச்ரேகரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவது குறித்து பொது நிர்வாகத் துறையின் நெறிமுறைகள் பிரிவுதான் கவனிக்கவேண்டும். மஹாராஷ்டிராவில் முக்கியமான நபர் இறந்துபோனால் அவருக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டுமா கூடாதா என்பது குறித்து நெறிமுறைகள் பிரிவுதான் முடிவு செய்யும். இந்த விஷயத்தில் நாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...