தனக்கான விடுமுறையை நவம்பர் மாதம் வரை தோனி நீட்டித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து டிசம்பரில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில்தான் அவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இரு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார் தோனி. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய விடுமுறையை நவம்பர் மாதம் வரை தோனி நீட்டித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் விஜய் ஹசாரே கோப்பை, வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளில் தோனி பங்கேற்கப் போவதில்லை என்று தெரிகிறது.
டிசம்பர் மாதம் இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதனால் இந்தத் தொடரில்தான் அடுத்ததாக தோனி பங்கேற்பார் எனத் தெரிகிறது. கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். தற்போது அவர் ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு டிசம்பரில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.