கரோனா காலத்தில் நான்கு மாதங்கள் வெளிநாடுகளில் டி20 கிரிக்கெட் ஆட்டங்களை விளையாடவுள்ளார் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர்.
சான்ட்னர், ராஸ் டெய்லர், காலின் மன்ரோ, டிம் செய்ஃபர்ட், கிளென் பிலிப்ஸ், கூரே ஆண்டர்சன், ஸ்காட் குகலைய்ன், நிக் கெல்லி, இஷ் சோதி ஆகிய வீரர்கள் இந்த வருட சிபிஎல் போட்டியில் விளையாடுகிறார்கள். பிரெண்டன் மெக்குல்லம் டிரின்பேகோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இந்த 10 பேரும் இந்த வாரம் சிபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்திலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்கிறார்கள்.
இதன்பிறகு ஐபிஎல் போட்டியில் விளையாட சான்ட்னர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்கிறார். இஷ் சோதி, ராஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராகவும் மெக்குல்லம் கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றுவதற்காக ஐபிஎல் போட்டியில் இணைந்துகொள்வார்கள். இவர்களில் நியூசிலாந்து வீரர்களில் சான்ட்னர் மட்டும் சிபிஎல், ஐபிஎல் என இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளார்.
நவம்பர் 8 அல்லது 10-ல் ஐபிஎல் முடிவடையும். இதன்பிறகு நியூசிலாந்து திரும்பவுள்ள சான்ட்னர், சோதி, மெக்குல்லம் ஆகிய மூவரும் இரு வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.