டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த அவனி லெகாரவுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் 249.6 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது அவனி லெகாரா. இதன்மூலம் பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
இதையடுத்து பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அவனி லெகாரவுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் வெள்ளி வென்ற தேவேந்திராவுக்கு ரூ. 2 கோடியும் வெண்கலம் வென்ற சுந்தர் சிங்குக்கு ரூ. 1 கோடியும் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திரா வெள்ளிப் பதக்கமும் சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கமும் வென்றார்கள்.