இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது?: 5-ம் நாள் உணவு இடைவேளையில் 144/6

5-ம் நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது?:  5-ம் நாள் உணவு இடைவேளையில் 144/6
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை வெல்லும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி. 5-ம் நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா,  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து ஃபாலோ ஆன் வாய்ப்பு வழங்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 420 என்ற கடினமான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. ரோஹித் 12 ரன்களுக்கு வெளியேறியிருந்தாா். கில் 15, புஜாரா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

5-ம் நாளான இன்று இந்திய அணி மிகவும் நம்பியிருந்த புஜாராவை 15 ரன்களில் வீழ்த்தினார் ஜேக் லீச். நன்கு விளையாடி வந்த ஷுப்மன் கில், 50 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதே ஓவரில் ரஹானேவையும் டக் அவுட் செய்து அசத்தினார் ஆண்டர்சன்.

இதன்பிறகும் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடைசி நாளில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், 11 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆனார். அவருடைய விக்கெட்டை பெஸ் வீழ்த்தினார்.

5-ம் நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் லீச் 2 விக்கெட்டுகளையும் பெஸ் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்கள். 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு 276 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் முதல் டெஸ்டை வெல்லும் நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com