சர்ச்சைக்குரிய ட்வீட்கள்: தடை, அபராதத்துடன் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன்

எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்காக இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சனுக்கு...
சர்ச்சைக்குரிய ட்வீட்கள்: தடை, அபராதத்துடன் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன்

எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்காக இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சனுக்கு எட்டு ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இங்கிலாந்து சார்பாக 27 வயது ஆலி ராபின்சன் அறிமுகமானார். இந்த டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். 

2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இனவெறி உணர்வுகளுடன் சர்ச்சைக்குரிய ட்வீட்களை ஆலி ராபின்சன் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற ஆலி ராபின்சனுக்கு இடைக்காலத் தடை விதித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி). நியூசிலாந்து தொடரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.  

தன்னுடைய ட்வீட்களுக்கு ராபின்சனும் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். நான் இனவெறியன் அல்லன். பாலின அடிப்படையில் வேறுபாடு பார்ப்பவனும் அல்லன். என்னுடைய நடவடிக்கைகளுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட ட்வீட்களை வெளியிட்டதற்காக வெட்கப்படுகிறேன். பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுள்ளேன். அப்போது நான் என்ன மனநிலையில் இருந்திருந்தாலும் என்னுடைய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கிடையாது. அதன்பிறகு நான் பக்குவம் அடைந்துள்ளேன். என்னுடைய ட்வீட்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்தார் ஆலி ராபின்சன். 

இந்நிலையில் ஆலி ராபின்சன் 8 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 5 ஆட்டங்களுக்கான தடையை அடுத்த இரண்டு வருடங்களுக்கு விதிக்க முடியாது. மேலும் கிட்டத்தட்ட ரூ. 33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இசிபி அமைத்த கிரிக்கெட் கட்டுப்பாடு ஆணையம் இந்த முடிவைத் தெரிவித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட், விடாலிடி பிளாஸ்ட் டி20 ஆட்டங்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டது இசிபி. எனவே உடனடியாக சர்வதேச மற்றும் இதர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட ஆலி ராபின்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆகஸ்ட் 4 முதல் தொடங்கும் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாட ராபின்சனுக்கு அனுமதி கிடைத்துள்ளது. 

இசிபியின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கெனவே நான் கூறியபடி பழைய ட்வீட்களுக்காக வெட்கப்படுகிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ஆலி ராபின்சன் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com