கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ அமைப்பு வழங்கவுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், கரோனா தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் மக்களில் சிலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்தச் சிக்கலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் பிசிசிஐ அமைப்பு 10 லிட்டர் 2000 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்க முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க 10 லிட்டர் 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறோம். கரோனா வைரஸுக்கு எதிராக நாம் போராடும் இச்சூழலில் மருத்துவத்துறை மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. முன்களப் போராளிகளான அவர்கள், நம்மைக் காக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். உடல்நலம், பாதுகாப்புக்கு பிசிசிஐ எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.