சயீது முஷ்டாக் அலி இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பரோடா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
சயீது முஷ்டாக் அலி இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தமிழகம் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பரோடா தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தேவ்தர் மற்றும் நினத் ரத்வா களமிறங்கினர்.
தமிழக வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பரோடா வீரர்களும் ரன் அவுட் ஆகி சொதப்பினர். இதனால், அந்த அணி 8.5 ஓவர்களில் 36 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, வி சோலங்கி மற்றும் ஏ ஷேத் பாட்னர்ஷிப் அமைத்தனர். 7-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஷேத் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, சோலங்கி கடைசி ஓவரில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.
தமிழகம் சார்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், அபராஜித், சோனு யாதவ் மற்றும் எம் முகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, இலக்கை விரட்டி தமிழகம் அணி விளையாடி வருகிறது.