பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்குக் கெளரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020ல் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா. 35 வயது சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வீரராக அறியப்பட்டார்.
சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 11 வருடங்களில் 10 வருடங்களில் 370+ ரன்கள் எடுத்துள்ளார். 2020-ல் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் ரெய்னா. இதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அந்த வருடம் சிஎஸ்கே, பிளேஆஃப்புக்கு முதல்முறையாகத் தகுதி பெறவில்லை. கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பெற்றார் ரெய்னா. கோப்பையை வென்றது சிஎஸ்கே. ரெய்னாவை இந்த வருடம் ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கவில்லை.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனா், வேந்தா் ஐசரி கே. கணேஷ், ட்விட்டரில் கூறியதாவது: ஆகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழகத்திடமிருந்து கெளரவ டாக்டர் பட்டத்தை சுரேஷ் ரெய்னா பெறுவார் என்று கூறியுள்ளார்.