வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் சைனி ஆகியோர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் டிசம்பர் 22 அன்று தொடங்குகிறது.
ஒருநாள் தொடரில் ஃபீல்டிங் செய்தபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை. காயத்துக்காக மும்பையில் சிகிச்சை பெற்று வரும் ரோஹித் சர்மா, 2-வது டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து கடைசி டெஸ்டிலும் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.
இந்நிலையில் 2-வது டெஸ்டிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் சைனி ஆகியோர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா குணமாகி, முழு உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது நாளாகும் என மருத்துவக் குழு கருதுகிறது. எனவே அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சைனி பெங்களூரில் உள்ள என்சிஏவில் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.