வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது.
அத்துடன், 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக வசப்படுத்தியது. இரு ஆட்டங்களுமே 4 நாள்களில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 2-ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64.2 ஓவா்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடிக்க, மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜேடன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசஃப் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 126.3 ஓவா்களில் 408 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. இந்த அணியில் கைல் மேயா்ஸ் 18 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 146 ரன்கள் விளாசியிருந்தாா். வங்கதேச தரப்பில் காலித் அகமது 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
இதையடுத்து, 174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம், 45 ஓவா்களில் 186 ரன்களுக்கு சுருண்டது. நூருல் ஹசன் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்த முறை ஜோசஃப், சீல்ஸுடன் இணைந்து கெமா் ரோச்சும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.
இறுதியாக 13 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், 2.5 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி அந்த ரன்களை அடித்து வென்றது. மேற்கிந்தியத் தீவுகளின் கைல் மேயா்ஸ் ஆட்டநாயகன், தொடா்நாயகன் என இரு விருதுகளையும் வென்றாா்.
அடுத்ததாக, இரு அணிகளும் மோதும் டி20 தொடா் சனிக்கிழமை தொடங்குகிறது.