ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தங்களுடைய வீரர்களின் பட்டியலில் நவம்பர் 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு சிறிய அளவிலான வீரர்களின் ஏலம் நடைபெறும்.
இந்நிலையில் டிசம்பர் 23 அன்று கொச்சியில் ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் கூடுதலாகத் தலா ரூ. 5 கோடியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குகிறது பிசிசிஐ. இதனால் தங்களிடம் மீதமுள்ள தொகையுடன் இந்த ரூ. 5 கோடியையும் சேர்த்துக்கொண்டு அணிகள் ஏலத்தில் பங்கேற்கும். 10 அணிகளில் பஞ்சாப் அணிக்குத்தான் அதிகபட்சமாக ரூ. 3.45 கோடி மீதமுள்ளது. லக்னெள அணி முழு பணத்தையும் செலவு செய்துவிட்டது. சிஎஸ்கே அணியிடம் ரூ. 2.95 கோடி மீதமுள்ளது. நடப்பு சாம்பியன் குஜராத்திடம் ரூ. 15 லட்சமே மீதமுள்ளது.
இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், கேம்ரூன் கிரீன் ஆகிய வீரர்கள் பங்கேற்றால் அவர்களைத் தேர்வு செய்ய பலத்த போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.