டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 நாள் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 29 அன்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 அன்றும் தொடங்குகின்றன. இந்த இரு ஆட்டங்களிலும் விளையாடவுள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய ஏ அணியில் புஜாரா, உமேஷ் யாதவ் விளையாடுகிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த ரோஹன் குண்ணுமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 24 வயது குண்ணுமல் இந்த வருடம் 9 முதல்தர இன்னிங்ஸில் 4 சதங்கள் அடித்துள்ளார். மேலும் இளம் வீரர்களான யாஷ் துல், யாஷவி ஜெயிஸ்வால் ஆகிய இருவரும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
இந்நிலையில் வங்கதேசத் தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றவுள்ளார்கள். இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக உள்ள திலீப், அடுத்த மாதம் இந்திய அணியினருடன் இணைந்து பணியாற்றுவார்.
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி, கடந்த வியாழன்று டாக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிடுடன் இணைந்து டிசம்பர் 1 அன்று வங்கதேசத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 22 அன்றும் தொடங்கவுள்ளன.