உத்தரகண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்தை நடிகர் அனில் கபூர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள தனது தாயை பாா்க்க தில்லியில் இருந்து டேராடூன் நெடுஞ்சாலையில் சென்ற ரிஷப் பந்த் கார், மங்லெளா் பகுதி அருகே விபத்துக்குள்ளானது.
வேகமாக சென்ற கார் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதியது. இதில் ரிஷப் பந்துக்கு முகுது, நெற்றி மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தை நேரில் கண்ட ஹரியாணா அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் ரிஷப் பந்தை மீட்டு ரூா்கி பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக உத்தரகண்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அரசு செலவில் அவருக்கு உயர்மட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரகண்ட் தனியார் மருத்துவமனைக்குச் சென்று நடிகர்கள் அனில் கபூர், அனுபம் கேர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அவரிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் கபூர், நாங்கள் ரிஷப் பந்தையும், அவரின் தாயாரையும் நேரில் சந்தித்தோம். அவரின் உடல் நிலை சீராகவுள்ளது. அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார். மக்கள் அவர் (ரிஷப் பந்த்) விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்ய வேண்டும். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் எனக் குறிப்பிட்டார்.