ரஹானே, புஜாரா நீக்கப்படுவார்கள் என நான் கூறவில்லை: செளரவ் கங்குலி விளக்கம்

வீரர்களின் தேர்வு பற்றிய முடிவுகளை தேர்வுக்குழுவினரே எடுப்பார்கள் என்றார். 
ரஹானே
ரஹானே

இந்திய அணியிலிருந்து ரஹானேவும் புஜாராவும் நீக்கப்படுவார்கள் என்று தான் சொன்னதாக வெளியான செய்திகளுக்கு பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் பல ஆட்டங்களாக மோசமாக விளையாடி வருகிறார்கள். 2018 டிசம்பரிலும் 2019 ஜனவரியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்டுகளில் சதங்கள் அடித்தார் புஜாரா. அவ்வளவுதான். 2019 ஜனவரிக்குப் பிறகு இன்று வரை புஜாரா ஒரு சதமும் எடுக்கவில்லை. ரஹானே இதைவிடவும் மோசம். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். 

புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் 33 வயதுதான். அதனால் இருவரும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ரஹானே, புஜாரா பற்றி பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி சமீபத்தில் கூறியதாவது: ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் அருமையான வீரர்கள். இருவரும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி நிறைய ரன்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன். நிச்சயமாக இதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதில் எதுவும் பிரச்னை இருக்காது என நினைக்கிறேன். ரஞ்சி கோப்பைப் போட்டி என்பது மிகவும் பெரியது. நாங்கள் அனைவரும் அந்தப் போட்டியில் விளையாடியுள்ளோம். எனவே அவர்களும் விளையாடுவார்கள். கடந்த காலங்களில் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பெற்றபோது இருவரும் அதில் விளையாடியுள்ளார்கள் என்றார். இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவும் ரஹானேவும் நீக்கப்படுவார்கள் என ரசிகர்கள் எண்ணினார்கள்.

இந்நிலையில் தன்னுடைய பேட்டியின் அர்த்தம் வேறு. டெஸ்ட் தொடருக்கு முன்பு தொடங்கும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் ரஹானேவும் புஜாராவும் பங்கேற்பார்கள் என்கிற அர்த்தத்தில் தான் சொன்னேன் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

நான் என்ன சொன்னேன் என்றால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டி தொடங்குவதால் அதில் ரஹானேவும் புஜாராவும் விளையாடுவார்கள் என்றுதான் சொன்னேன். அதற்குப் பிறகு தேர்வுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள். ரஞ்சி போட்டியின் எலைட் பிரிவு ஆட்டங்கள் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. மார்ச்சில் இலங்கை டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. வீரர்களின் தேர்வு பற்றிய முடிவுகளை தேர்வுக்குழுவினரே எடுப்பார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com