இரண்டரை மாதங்களுக்கு ஐபிஎல் போட்டி: ஜெய் ஷா தகவல்

இந்திய அணி ஒரு நாட்டில் டெஸ்டிலும் இன்னொரு நாட்டில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் ஆடும் சூழல்...
இரண்டரை மாதங்களுக்கு ஐபிஎல் போட்டி: ஜெய் ஷா தகவல்

2023 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு வெளியிடப்படும் ஐசிசி கிரிக்கெட் அட்டவணையில் ஐபிஎல் போட்டிக்கு இரண்டரை மாதங்கள் ஒதுக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ.48,390.5 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிடல் ஒளிபரப்பில் வையாகாம் நிறுவனமும் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளன.  

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது:

அடுத்த ஐசிசி எஃப்டிபி அட்டவணையில் (2023 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு), ஐபிஎல் போட்டிக்காக இரண்டரை மாதங்கள் ஒதுக்கப்படும். இதன்மூலம் எல்லா சர்வதேச கிரிக்கெட் வீரர்களாலும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஐசிசி மற்றும் இதர கிரிக்கெட் வாரியங்களுடன் இதுபற்றி விவாதித்துள்ளோம். 

சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட பிசிசிஐயும் ஆர்வமாக உள்ளது. பெரிய நாடுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் சிறிய நாடுகளுடனும் விளையாடவுள்ளோம். வருங்காலத்தில் இந்திய அணி ஒரு நாட்டில் டெஸ்டிலும் இன்னொரு நாட்டில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் ஆடும் சூழல் உருவாகலாம். இதனால் நம்மிடம் எப்போதும் 50 வீரர்கள் விளையாடுவதற்குத் தயாராக இருப்பார்கள். இதுபற்றி என்சிஏ தலைவர் லக்‌ஷ்மணிடம் விவாதித்து வருகிறேன். ஒரே நேரத்தில் ஒரு நாட்டின் இரு அணிகள் சர்வதேசப் போட்டியில் விளையாடும் சூழலுக்கு நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com