டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு வெற்றியும் அடையாமல் சூப்பர் 12 சுற்றை முடித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் தோல்வியடைந்தது. 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் முகமது நபி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
எங்கள் ஆதரவாளர்கள் எதிர்பார்க்காத முடிவுடன் எங்களுடைய டி20 உலகக் கோப்பைப் பயணம் முடிவடைந்துள்ளது. ஆட்டங்களின் முடிவுகளைக் கண்டு உங்களைப் போலவே நாங்களும் ஏமாற்றமடைந்துள்ளோம். கடந்த ஒரு வருடமாக கேப்டன் விரும்பும், ஒரு பெரிய போட்டிக்கு வேண்டிய பயிற்சிகளுடன் எங்களுடைய அணி தயாராகவில்லை. கடந்த சில சுற்றுப்பயணங்களில் நானும் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவினரும் ஒரே அலைவரிசையில் இல்லை. இது அணியைப் பாதித்தது. எனவே கேப்டன் பதவியிலிருந்து உடனடியாக விலகுகிறேன். அணி நிர்வாகமும் அணியும் விரும்பினால் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
37 வயது முகமது நபி ஆப்கானிஸ்தான் அணிக்காக 3 டெஸ்டுகள், 133 ஒருநாள், 104 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக 28 ஒருநாள், 35 டி20 ஆட்டங்களில் செயல்பட்டுள்ளார். 2015-ல் இவருடைய தலைமையில் முதல் உலகக் கோப்பை வெற்றியை, ஸ்காட்லாந்துக்கு எதிராகப் பெற்றது ஆப்கானிஸ்தான்.