கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரன் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சுற்றில் மோசமாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 12 தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் விடைபெறுகிறார். இந்தத் தோல்வி என்னைத் தடுத்து நிறுத்தாது. இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வேன் என்று பேட்டியளித்தார் கேப்டன் நிகோலஸ் பூரன்.
இந்நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் பூரன். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மே.இ. தீவுகள் அணி மோசமாக விளையாடியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் வீரராகத் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மே.இ. தீவுகள் அணியின் கேப்டனாக பூரன் தலைமை தாங்கிய 15 ஒருநாள் ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் 15 டி20 ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் அடைந்தார். டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளிடம் மே.இ. தீவுகள் அணி தோற்றது. ஒரு பேட்டராகவும் பூரனின் பங்களிப்பு மோசமாகவே இருந்தது. கடந்த 10 இன்னிங்ஸில் 94 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் 5,7,13 ரன்கள் மட்டும் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த மார்ச் மாதத்தில் தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.