உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக உடல் தகுதியை நிரூபிக்க நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனுக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய அணியை அனைத்து அணி நிர்வாகமும் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்கும் அணி வீரர்கள் விவரத்தை அணி நிர்வாகம் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை மாற்றம் செய்து கொள்ளலாம்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கேன் வில்லியம்சன். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் குஜராத் அணியில் விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அதன்பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது நியூசிலாந்துக்காகவும் அவரால் விளையாட முடியாத சூழல் உருவானது. காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேன் வில்லியம்சன் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேன் வில்லியம்சனுக்கு உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக நியூசிலாந்து அணி நிர்வாகம் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது: உலகக் கோப்பை அணியை முடிவு செய்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. அதனால் நாங்கள் கேன் வில்லியம்சன் அவரது உடல் தகுதியை நிரூபிக்க இரண்டு வாரங்கள் முழுவதையும் அவருக்காக கால அவகாசமாக கொடுத்திருக்கிறோம். அனைத்து அணிகளும் தங்களது அணி வீரர்களின் விவரங்களை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் ஐசிசி-யிடம் ஒப்படைக்க வேண்டும். செப்டம்பர் 27 ஆம் தேதி வரை அணியில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அதனால், கேன் வில்லியம்சனுக்கு நாங்கள் அவர் அணியில் இணைவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொடுக்க உள்ளோம். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் மீண்டும் பேட்டிங் செய்வதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.