

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ருதுராஜ் 32 ரன்களில் ஆட்டமிழக்க ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது. ஜித்தேஷ் சர்மா 19 பந்துகளில் 35 ரன்களும் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள்), ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்களும் (4 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேசன் பெஹ்ரண்டிராஃப் மற்றும் தன்வீர் சங்கா தலா 2 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.