தன்னுடைய பேட்டிங்கில் மாற்றம் செய்யத் தேவையில்லை என நினைப்பதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
என்னுடைய ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக பேட்டிங் செய்யும் போது சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டாலே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா பெரிதாக பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. அவரது மோசமான பேட்டிங் காரணமாக தில்லி கேப்பிடல்ஸ் தொடரின் பாதிக்குப் பிறகு அவருடைய இடத்தில் மாற்று வீரர்களை களமிறக்கியது. இந்த ஆண்டு 8 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 106 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த நிலையில், தன்னுடைய பேட்டிங்கில் மாற்றம் செய்யத் தேவையில்லை என நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: எல்ஜிஎம்: இசை, டிரைலரை வெளியிடும் எம்.எஸ்.தோனி, சாக்ஷி தோனி !
இது தொடர்பாக அவர் பேசியதாவது: போட்டியின்போது ஆட்டம் நான் நினைத்தவாறு போகவில்லையென்றால் அதற்காக நான் ஆட்டத்தின் போக்குக்கு மாறிக் கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை. நான் என்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என நான் நினைக்கிறேன். நான் இப்போது விளையாடுவதைக் காட்டிலும் சிறிது புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். எந்த போட்டியில் விளையாடினாலும் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்றார்.