ஆஷஸ் தொடரின் 4-வது போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 592 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. நேற்று (ஜூலை 20) இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 384 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி ப்ரூக் 14 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: எல்ஜிஎம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், இன்று (ஜூலை 21) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஹாரி ப்ரூக் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹாரி ப்ரூக் 61 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, களமிறங்கிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆட மறுமுனையில் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 81 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஸ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.