ஆஷஸ் கடைசி டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆஷஸ் டெஸ்டின் கடைசி போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தேநீர் இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் மற்றும் கவாஜா இருவரும் அரைசதம் அடித்து களத்தில் உள்ளனர். வார்னர் 58 ரன்களுடனும், கவாஜா 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 249 ரன்களே தேவைப்பட்டது.
இதையும் படிக்க: ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தல்!
இதனையடுத்து, போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. மழை நின்ற பின் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் நான்காம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.