கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாடிய கெளதம் கம்பீர், கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்த லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.
லக்னெள அணியுடனான ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்துழைப்பு அளித்த அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து கம்பீர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் மீண்டும் இணைந்துள்ளதாகவும், தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டுடன் கைகோர்த்துள்ளதாகவும் அந்த அணியின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2011 முதல் 2017 வரை கொல்கத்தா அணியில் கம்பீர் விளையாடியுள்ளார். இதில், 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி, 2 முறை கோப்பையை வென்றது.
2017-ஆம் ஆண்டுக்கு பிறகு தில்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறிது காலம் கம்பீர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.