ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு மேலுமொரு தங்கம் கிடைத்துள்ளது. பெண்கள் குழு வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், ஆண்கள் குழுவும் தங்கம் வென்றுள்ளது.
நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
12 ஆவது நாளான இன்று, ஆடவருக்கான வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ், பிரதமேஷ், அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது.
இதில் தென்கொரியாவை 235 - 230 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
வில்வித்தையில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பிரணித் கெளர் ஆகியோர் அடங்கிய குழு இன்று (அக். 5) தங்கம் வென்ற நிலையில், ஆடவர் குழுவும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.