ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மேலும், போட்டியில் பங்கேற்கவுள்ள 303 வீரர், வீராங்கனைகளுடன் 143 பயிற்சியாளர்களையும் மத்திய அரசு அனுப்பவுள்ளது.
ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதி சீனாவில் தொடங்கவுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், இந்தியாவிலிருந்து பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை இன்று (அக். 17) வெளியிட்டுள்ளது. 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என 303 பேர் பங்கேற்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் 17 விதமான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். வீரர் - வீராங்கனைகளுடன் 143 பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
கடந்தமுறை நடைபெற்ற போட்டியில், 13 போட்டிகளில் பங்கேற்க 190 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.