ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிடைத்த சிறப்பான தொடக்கத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டதாக அந்த அணியின் பதும் நிசங்கா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி நேற்றையப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அந்த அணி 125 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த 84 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையும் படிக்க: இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வெளிநாட்டு வீரர்!
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிடைத்த சிறப்பான தொடக்கத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டதாக அந்த அணியின் பதும் நிசங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மிகவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள தவறியதை நினைத்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்தத் தவறியதால் எதிரணிக்கான இலக்கு 210 ஆக குறைந்தது. இந்த மாதிரியான விக்கெட்டில் நாங்கள் 300 ரன்களுக்கு நெருக்கமான ஸ்கோரை எடுத்திருக்க வேண்டும். அதை எடுக்கத் தவறியதே எங்களது தோல்விக்கு காரணம். என்னுடைய சிறப்பான ஆட்டத்தை அணிக்காக வெளிப்படுத்தியதாக நான் நம்புகிறேன். இனிவரும் போட்டிகளிலும் என்னுடைய பங்களிப்பை அணிக்கு வழங்க காத்திருக்கிறேன். எங்களது தவறுகளை திருத்திக் கொண்டு இனிவரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: இதுதான் தோல்விக்கு காரணம்: இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்
நேற்றையப் போட்டியில் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசங்கா 67 பந்துகளில் 61 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.