இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ஆசிய கோப்பை: அக்ஷர் படேல் விலகல்? அவருக்கு பதிலாக தமிழக வீரர்!
தென்னாப்பிரிக்காவுடனான 4-வது ஒருநாள் போட்டியில் நேற்று (செப்டம்பர் 15) ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இந்தப் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் தொடர்ந்து ஓரிரு பந்துகளை சந்தித்தார். பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது: டிராவிஸ் ஹெட்டுக்கு உறுதியாக எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது போல் தெரிகிறது. அவருக்கு ஸ்கேன் செய்யப்பட உள்ளது. ஸ்கேன் அறிக்கையைப் பொறுத்தே அணியில் அவரது நிலை குறித்து தெரியும் என்றார்.