பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
வருகிற அக்டோபர் 5 முதல் உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அண்மையில் அறிவித்தன. செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அணியில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதையும் படிக்க: இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள்: சாதனைத் துளிகள்!
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: இந்த உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் சிறப்பாக செயல்படுவார் என நான் நினைக்கிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. பேட்டிங் செய்யும்போது அவரைப் போன்று பந்தினை எதிர்கொள்பவரை நான் பார்த்ததே இல்லை. விராட் கோலி, ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் போன்றவர்கள் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள். ஆனால், பாபர் அசாமின் விளையாட்டு வேறு விதமான தரத்தினை உள்ளடக்கியது என்றார்.
இந்த ஆண்டு 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 745 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 49.66 ஆக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் குவித்துள்ளார். இந்த 16 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 151.
இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 5,409 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 58.16 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 89-க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை அவர் 19 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 158.
ஒருநாள் போட்டியில் ஐசிசி சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.