ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தினை வென்று அசத்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் அறிமுகமான முதல் ஆண்டிலேயே இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளனர். ஆசியப் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.
வருகிற 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல் நகரிலும், 2032 ஆம் ஆண்டு பிரிஸ்பேனிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது தொடர்பாக ஒலிம்பிக் குழு சார்பில் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் அதற்கான வரவேற்பு மற்றும் வருமானம் அதிக அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் முதலும், கடைசியுமாக கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.