இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரபல வீரர் ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. ஆமதாபாத்தில் நடைபெறும் 4-வது மற்றும் கடைசி டெஸ்டுக்குப் பிறகு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 17 அன்று தொடங்குகிறது. கடைசி ஒருநாள் ஆட்டம் மார்ச் 22 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பிபிஎல் போட்டியில் விளையாடியபோது ஜை ரிச்சர்ட்சனுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்ததால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் காயத்தினால் உண்டான பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருப்பதால் தற்போது ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியில் ஜை ரிச்சர்ட்சனால் விளையாடுவது சந்தேகம் என அறியப்படுகிறது. ஐபிஎல் ஏலத்தில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி.
இதையடுத்து ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸி. ஒருநாள் அணியில் நாதன் எல்லீஸ் தேர்வாகியுள்ளார்.