ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்த நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை தனிநபரின் சாதனைகளுக்கான இடமல்ல: ஸ்ரேயாஸ் ஐயர்
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லே பரேசி மற்றும் மேக்ஸ் ஓடௌத் களமிறங்கினர். வெஸ்லே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் காலின் அக்கர்மேன் மற்றும் மேக்ஸ் ஓடௌத் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், மேக்ஸ் ஓடௌத் 42 ரன்களிலும், காலின் அக்கர்மேன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்களில் சைபிராண்ட் தவிர மற்ற யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நிதானமாக விளையாடிய சைபிராண்ட் 86 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியில் 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
கடந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்ட ஆப்கானிஸ்தான் இன்றையப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.