இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் அதிகபட்சமாக 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்திய கேப்டன் ரோஹித் சர்மா 19 ரன்களில் ஜோ ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசியும், ஷுப்மன் கில் அரைசதம் எடுத்தும் அசத்தினர்.
தசைப்பிடிப்பின் காரணமாக 104 ரன்களில் (9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) ஜெய்ஸ்வால் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். அதன்பின் களம் கண்ட ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.