இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினின் சேவைக்கு போதுமான அளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினின் சேவைக்கு போதுமான அளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் டி வில்லியர்ஸ் பேசியதாவது: என்ன ஒரு அருமையான சாதனை. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள். நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்களில் நீங்களும் ஒருவர். இந்திய அணிக்கு அஸ்வின் மிகப் பெரிய சொத்து. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுபவர் அஸ்வின். மிகச் சிறந்த வீரரான அவருக்கு எப்போதும் போதுமான அளவுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும் என்றார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 23) ராஞ்சியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.