இந்தியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய சவால் காத்திருக்கிறது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு சவாலானதாக இருக்கப்போகிறது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 25 முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு சவாலானதாக இருக்கப்போகிறது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சானியா மிர்சாவைப் பிரிந்த சோயிப் மாலிக் மறுமணம்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பேஷ்பால் கிரிக்கெட்டை ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் பேஷ்பால் கிரிக்கெட் முறை அவர்களுக்கு வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. இங்கிலாந்தில் இந்த பேஷ்பால் கிரிக்கெட் முறை அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளுமே சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு கடினமான நாடுகள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கப் போகிறது. இந்திய ஆடுகளங்கள் வித்தியாசமானவை. அவை சுழற்பந்துவீச்சுக்கு உகந்தவையாக இருக்கும். அதனால் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்திய அணியில் வேகப் பந்துவீச்சும் சிறப்பானதாக உள்ளது என்றார்.
பேஷ்பால் கிரிக்கெட் முறைக்குப் பிறகு இங்கிலாந்து அணியும், கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியும் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.