19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்தை 201 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய முஷீர் கான் சதமடித்து அசத்தினார். அவர் 106 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் உதய் சரண் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் ஆலிவர் ரைலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!
302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 29.4 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டேனியல் ஃபோர்கின் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் நமன் திவாரி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சௌமி பாண்டே 3 விக்கெட்டுகளையும், தனுஷ் கௌடா, முருகன் அபிஷேக் மற்றும் உதய் சரண் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இதன்மூலம், அயர்லாந்தை 201 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.